Wednesday, September 15, 2010

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

2 கருத்துக்கள்
கழுத்தையும் நெரிக்கும் கசகசா..! பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!

இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.
கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான்வளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் தண்டனை: சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்.


மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு?

இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.

அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை.

இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.

இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது.

இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!

சென்னை செய்த எச்சரிக்கை! முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார்.

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.

கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.
இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.

இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.
கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது.

இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்!'' என்றார்கள்.

நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்!'' என்றார்கள்.

கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.

'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது.


அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது,

இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய்.

ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான். இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும்.

அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து,
'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.


உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம்.

''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்!

சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி.

இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள்.

அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில் தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள்
,

இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள்.

கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு.

எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.

ஸ்டார் பார், குளிர்பான கிக்! இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது.

வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.

கசகசா ஏன் கதி கலக்குது?
உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.


இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம்.

'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
-ஜூனியர் விகடன்


கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான்.

---------------------
ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தி

 அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.

துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு  இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.
----------------------------------------------------
, இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.

***வாஞ்ஜுர்***

2 கருத்துக்கள்:

  • September 15, 2010 at 11:28 AM

    மிகவும் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி அளிக்ககூடிய செய்தி , நீங்கள் அனுமதி அளித்தால் இந்த செய்தியை என்னுடைய வலை பூவில் பிரசுரிக்கிறேன்
    நன்றி

    karurkirukkan.blogspot.com

  • September 16, 2010 at 10:39 AM

    DEAR KARURKIRUKKAN

    இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.

    PLEASE PUBLISH THIS IN YOUR BLOG.

    LET THIS ARTICLE REACH EACH AND EVERYBODY.

    THANK YOU.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!