Tuesday, August 23, 2011

நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...

34 கருத்துக்கள்
                  ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகம்: 

    பிறிதொருவரின் கொள்கையை தவறென்று வாதிட்டால் அதற்கு மாற்றமாக தான் கொண்ட கொள்கை குறித்த இலக்கணத்தை மிக தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் இறை பின்பற்றுதலை எதிர்க்கும் நாத்திகம் இறை மறுப்புக்கான ஒரு வரைவிலக்கணத்தை இதுவரை ஏற்படுத்த வில்லையென்பதை விட தான் நிராகரிக்கும் இறைக்குறித்துக்கூட ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.  விக்கிபீடியா நாத்திகம் குறித்து இவ்வாறு கூறுகிறது 

நாத்திகம் - கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் ஒரு கொள்கையாகும்.

பொதுவாக இறை மறுப்பை அடிப்படையாக கொண்டாலும் இறைமறுப்பு என்றால் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதாவது, இறை என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில் வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா, அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன.

ஒரு கொள்கைக்கு மாற்றமாக உருவாகும் நேர் எதிர் கொள்கை தனக்கென ஒரு உறுதியான நிலைப்பாட்டை இதுவரை வைத்திருக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே..! இன்னும் இதில் வேடிக்கையென்னவென்றால் நாத்திகம் குறித்து கூறுகையில் எங்கெணும் பகுத்தறிவு என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை., ஆனால் இறை மறுப்பை பேசும் நாத்திகர்களுக்கு தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என குறியீடு இருப்பது தான் வருத்தத்திற்குரியது.,

நீண்ட காலமாக நாத்திக பார்வையில் விரியும் செந்திற காட்சி இஸ்லாத்தின் வெண்மையை பொய்மையாக்க குறை கண்டு காழ்ப்புணர்ச்சியை யூனிக்கோடில் கக்கிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய வெறுப்புக்கு தெளிவான மறுப்பு அழகாய் சொல்லப்பட்ட போதிலும் கடவுளை விமர்சிக்கும் நாத்திகர்கள் இதுவரையிலும் நாத்திகம் குறித்து உரையாட வாய் திறப்பதில்லை. ஆகவே அன்புள்ளம் கொண்ட இணைய வாழ் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...

நாத்திகரா  நீங்கள்..?
      
Good!.. உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்., கீழ்க்கண்ட ஆத்திக பதிவர்கள் உங்களோடு நாத்திகம் குறித்து நாகரிமான முறையில் உரையாட காத்திருக்கிறார்கள்., அவர்களின் நாத்திகம் குறித்த சந்தேக பார்வையை நீங்களும் பாருங்கள்., உங்கள் பார்வையில் நாத்திகம் உண்மையென்றால் அதுக்குறித்து உரையாட வாருங்கள்., 




"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"


மேலும் நாத்திகம் குறித்த

1. சந்தேகங்கள்...
2. பார்வைகள்...
3. எண்ணங்கள்..



"மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, அதன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து, தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா" என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!

ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், எதோ பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள் போல...'கண்ணால் கண்டால்தான் நம்புவேன்' என்கின்றனர்..!

இதில் வேடிக்கை என்னவென்றால் கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள், தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்..!

...என்றும் உங்கள் அன்புள்ள சகோ.,
முஹம்மத் ஆஷிக்.
mohaashik[at]gmail.com




நாத்திகம் என்றால் என்ன???....

     கடவுளை மறுப்பது என்று விளக்கம் சொல்கின்றார்கள் நாத்திகர்கள். எப்படி மறுக்க முடியும்?? தர்க்கரீதியான காரணங்கள் இருக்கவேண்டுமல்லவா??. காரணம் கேட்டால் அறிவியலை நோக்கி கைநீட்டுகின்றார்கள் நாத்திகர்கள். ஆச்சர்யம். ஆம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பதாக பிரபல பெர்க்கிலி பல்கலைகழக தளம் கூறுகின்றது. அறிவியல் இறைவனை மறுப்பதாக இருந்தால், எப்படி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்???. இதற்கு நாத்திகர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?

அதுபோல, எந்த அறிவியலை வைத்து இறைவனை மறுக்கின்றார்களோ, அதே அறிவியலை வைத்து தான், "இந்த உலகம் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு அறிவார்ந்த சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர் பல விஞ்ஞானிகள். 

ஆக, அறிவியல் துணைக்கொண்டு இறைவனை மறுப்பது நிச்சயம் புரியாத புதிராகவே உள்ளது. 

ஒருசில நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன் இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 
aashiq.ahamed.14[at]gmail.com

           ===============================================================
* நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?

*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்?., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?

*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?


G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...
gulamdhasthakir[at]gmail.com

===============================================================



      நாத்திகர்களின் பிரதான ஆதாரமாகிய பரிணாமம் என்பது பொய் என்று சமீப காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. இருப்பினும் நாத்திக கொள்கையினால் மக்களுக்கு உள்ள ஆபத்துக்களை விளங்கி கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் பல மத கொள்கைகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை பிற மனிதர்களை கொல்லாதே, தவறு செய்யாதே என்பதே.  அப்படி தவறுகள் செய்தால் தண்டனை, நரகம் என்பதே இந்த கொள்கைகளில் போதிக்கப்படும் பிரதான விஷயங்கள். இந்த தண்டனைக்கு பயந்துகொண்டே பலவகையான குற்றங்கள் நடைபெறுவதில்லை.

கடவுளே இல்லை என கூறும் நாத்திகர்கள் இவ்வகையான குற்றங்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவர்களுடைய கொள்கையே உலகில் உள்ள கொள்கைகளில் மோசமான கொள்கை என்பதற்கு இவ்வுலகில் நடந்த, நடக்கும் சம்பவங்களே சாட்சி.

இவ்வுலகில் பெரிய தவறு பிற மனிதனை கொலை செய்வது. அதிக மக்களை கொன்று குவித்தவன் யாரென்று அனைவரும் அறிந்ததே, ஹிட்லர், அனைத்து யூதர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிறப்பால் ஒரு கிறித்துவனாக இருந்தும் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தான்.

வெள்ளை காலர் குற்றங்கள் (White collar crime)  என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள், குற்ற உணர்வு இல்லாமல் மெத்த படித்த மேதாவிகளால் செய்யப்படும் வரி ஏய்ப்பு, திருட்டு, கொள்ளை, சட்ட விரோதமாக பணம் ஈட்டல் மற்றும் சைபர் குற்றங்கள். அமெரிக்க வணிக அமைச்சரவையின் 1996 ன்  அறிக்கையின் படி வெள்ளை காலர் குற்றங்களால் நிறுவனங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டத்தின் மதிப்பு 400பில்லியன் டாலர்கள். மேலும் இந்த குற்றங்களினால் ஏற்படும் இழப்பு அதிகரிந்து தான் செல்கிறது. ஏனெனில் இப்படிப்பட்ட குற்றங்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் செய்யபடுகின்றன, குற்றங்கள் புரிபவர்களை கண்டறிவது என்பது அரசாங்கத்திற்கே சவாலாக உள்ளது. என்னதான் மறைவாக செய்தாலும் நமக்கு மேலே ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் மனிதர்களுக்குள் இல்லாமல் இந்த வெள்ளை காலர் குற்றங்களை எப்படி குறைக்க முடியும் என்பதற்கு நாத்திகர்கள் பதில் தருவார்களா?

மேலும் தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும் கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே, மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார் என்பதற்கே... கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட வேண்டும்?

இதுபோல பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும் குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

carbonfriend[at]gmail.com

        ==============================================================



1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு? 

4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா?

5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன?

6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன? 

8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"

அன்புடன்,
உங்கள் சகோதரி,
அஸ்மா.
costblog[at]gmail.com

            =============================================================


    ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! 

N.H. ABDUL BASITH
"You can't satisfy all the people with your wealth, but satisfy them with a cheerful face and a good character" - PROPHET MUHAMMAD (S.A.W)


basith27[at]gmail.com

       ===============================================================================


      நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா..? 

ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள், கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும், கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.

  -Mohamed Ihsas
 mohamedihsas786[at]gmail.com

      ==============================================================

     உலகத்தில் மதம் மற்றும் கடவுள் போன்ற கொள்கைகளை நம்பாமல் போனால், இவ்வுலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காணுவர்? அதாவது தீர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் யாருக்கு எந்த தீர்வு சரியெனபடுகின்றதோ அதையே அவர் தீர்வாக எடுத்துக் கொள்வர். அதனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வராது. சரி அப்படியே அவரவருக்கு பிடித்த தீர்வையே வைத்துக் கொண்டாலும் அதை பின்பற்றுபவர்களின் அளவுகோல் என்ன? 

      அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?

     அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?

இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்.

இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்.

தோழைமையுடன்
அபு நிஹான்                                                                                       
hajamydheen[at]gmail.com

                           =====================================================


       நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..

இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே!

நீங்கள் சொல்லலாம், வீடு உட்பட என் வீட்டில் இருக்கும் அத்துனையும் மனிதன் உருவாக்க அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன், அதனால் படைப்பாளி இல்லாமல் வந்திருக்க முடியாது என சொல்கிறேன் என்று,..சரிதான்..வீடு கட்டும் போது நீங்கள் பார்த்ததால் நம்புகிறீர்கள்...

அதுபோல இவ்வுலகம் படைக்கப்படும் போது குத்துக்கால் போட்டு, கண்ணத்தில் கைவைத்து உக்காந்து நான் பார்க்கவில்லை அந்த ஒரே காரணத்தால் நம்பவில்லை என்கிறீர்கள் சரிதானே!

இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

அப்படி இருக்க இவ்வுலகில் இருக்கும் அத்துனையும் முழுமைபெற்றும், அதில் ஒரு நேர்த்தியுடனும் இருக்க, அதுவோ இயற்கையாக வந்துவிட்டது என சொல்வது உங்களின் அறிவை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் காரியம் இல்லையா?? 

ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள். எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ் (அல்லாஹ் போதுமானவன்) ...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???

உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம்.

நீர்???இப்படியான ஒரு திரவத்தை மனிதன் காண்பதற்கு முன்புவரை சிந்தித்திருக்க முடியுமா?உலகில் மனிதன் உண்டாக்கிய அத்துனை விலைமதிப்புமிக்க பானங்கள், நிறமற்ற சுவையற்ற எளிய நீரின் சுவையை விஞ்ச முடிந்ததா?? இதுவும் இயற்கை என்றால்..இந்த நீர் ஏன் ஒரு அமிலமாக உருவாகி இருக்ககூடாது?..ஏன் வேறுவிதமான அடர்த்தியில் வெளியாகி இருக்ககூடாது...

மாசுக்களால் நிறைந்த உலகத்தில் மாசுமறுவற்று கண்ணாடிபோல் எப்படி உண்டானது...இந்த தன்மையும் தானாக வந்துவிட்டதா? இவ்வாறு எப்படி எப்படியோ இருந்திருக்க வேண்டிய நீர்..ஏன் தனிச்சிறப்பு மிக்க இத்தகைய குணாதிசியங்களை கொண்டதாக இருக்க வேண்டும்? இதை உலகில் உள்ள பிற உயிரினங்கள் பயன்படுத்தும்,அதனால் இப்படித்தான் நீர் இருக்க வேண்டும் என இயற்கை முடிவு செய்துவிட்டதோ??? 

இயற்கை என்ற அறிவற்ற எந்திரத்தில் இருந்து வெளியாகும் இந்த திரவம் இத்தனை தன்மைகளை கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்க சிரத்தை யாருடையது?இத்தனை குவாலிட்டி,இத்தனை பெர்ஃபெக்‌ஷன் யாருடையது???

ஒரு வேலை எல்லாம் சரியாக உருவாகி நீர் மட்டும் கரியமிலமாக இந்த இயற்கையில் இருந்து, இயற்கையாக வெளியாகி இருப்பின்..மனிதன் அதை உண்டுதான் வாழ்ந்திருக்க வேண்டுமா???..இல்லை வெவ்வேறு விதமாக இயற்கையாக உருவான நீரானது...உயிரினங்களின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி(???) கண்டு இன்று இத்தனை தெள்ளியதாக இருக்கிறதா சகோதரர்களே!!!

இது போல இயற்கை படைப்பு ஒவ்வொன்றையும் சிந்தித்தாலே போதுமே!

நீங்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ள போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிடுமே!அப்ரம் வருவோம் அந்த இறைவன் யார்?யாராக இருக்க முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம்...

முன் முடிவுகளை தூர எறிந்துவிட்டு திறந்த மனதுடன் சிந்திப்போம்...

நிச்சயமாக வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும், அறிவுடையோருக்கு திடமான அத்தாட்சிகள் பல இருக்கின்றன - அல்குர்ஆன் 3:90

அன்புடன்
ரஜின்
askabt.islam[at]gmail.com


படைத்தவன் நாடினால் பகுத்தறிவாளர்களின் பட்டியல் தொடரும்...





இறைவன் நாடினால் இத்தளத்திலோ அல்லது மேற்கண்டவர்களின் எந்த தளத்திலோ நாத்திகம் குறித்து உரையாட பதிவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
      இங்குள்ளவர் யாவரும் முகவரி தந்தே கருத்து தந்திருக்கிறார்கள்., போலி பெயரில் ஆநாகரிக பின்னூட்டமிடாமல் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து உண்மையையும் கொண்டு வாருங்கள்., 

அல்லாஹ் நன்கு அறிந்தவன் 

Thursday, August 11, 2011

ரமலானில் முஸ்லிம்கள்!..?

1 கருத்துக்கள்
                                                      ஓரிறையின் நற்பெயரால்
                 இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
        
    அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..! நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) அஃது நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

இஸ்லாமும் - ரமலானும்          ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்


 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
   
     இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,
    யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903 

                   பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
        
            ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.

ரமலானும் -முஸ்லிம்களும்      எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி.,
      
             பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும், 
      
             ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் "அஸ்தாஃபீருல்லாஹ்..!" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும், திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும்,அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும்
அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...

ரமலான் முழுக்க நம்மில்-

  • தஸ்பீஹ்கும் கையுமாக இருந்தவரின் கரங்களில் உயர்ரக சிகரெட்டுகள்..!
  • பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...!
  • கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
  • தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...!
  • பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
       இப்படி சிலர்..!

  இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.


இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ? 


இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..? 


தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?


நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..?

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்...
  மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

  "நோன்பு ஒரு கேடயமாகும்..!"


      ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்.,  அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,
         ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதேஅல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
      அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)


                                                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Saturday, August 6, 2011

நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)

4 கருத்துக்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என சிலர் (அறியாமையில்) கூறுவதுபோல் இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் பசியின் கொடுமையை வாழ்நாளெல்லாம் உணர்ந்த, தினமும் பட்டினியால் வாடும் ஏழைகளுக்கும் இந்த நோன்பை இஸ்லாம் கடமையாக்கி இருக்காது. பசியை உணர்ந்திருக்கும் செல்வந்தர்களாக இருந்தாலும், அத‌ன் கொடுமை அறியாமல் பழகிய வசதி படைத்தவர்க‌ளுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கும். ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும், அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. அது ஏன்? அதுபோல் இஸ்லாமிய நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க ரமளானின் ஒரு மாதகாலம் முழுவ‌தும் ஏழை/ பணக்காரன் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்? இறைவனும், இறுதித்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கூறுவதைப் பாருங்கள்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது". (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

நோன்பின் உன்னதமான நோக்கத்தை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு ரத்தினச் சுருக்கமாகவும், மிக அழகாகவும் சொல்லிக் காட்டுகிறான்.'நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக' என்ற ஒரு வார்த்தையிலேயே, எவ்வளவு அற்புதமான வாழ்வியல் பண்பாட்டினை மனிதனுக்கு போதிக்கும் நோக்கத்தை இறைவன் பொதிந்து வைத்துள்ளான் பாருங்கள்! (சுப்ஹானல்லாஹ்!)

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம். உதாரணமாக நாம் ஹலாலான முறையில் உழைத்து, சம்பாதித்த பொருட்களிலிருந்தோ, நமக்கு உரிமையான மற்ற‌ ஹலாலான பொருட்களிலிருந்தோ உண்பது நமக்கு அனுமதியளிக்கப் பட்டதாக இருந்தாலும், அந்த உணவை ரமலானின் பகல் நேரத்தில் உண்ணாமல் தவிர்த்துக் கொள்கிறோம். காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை! நம்முடைய‌ வீட்டில், சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற நிலையில் நம்மைத் தவிர யாருமில்லாமல் நாம் தனித்து இருந்தாலும், அங்கு அறுசுவை உணவுகளும் கண் முன்னால் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் பசியோ, தாகமோ, அவற்றை உண்ணவேண்டும் என்ற ஆவலோ ஏற்பட்டாலும் 'சாப்பிடக் கூடாது' என்ற அல்லாஹ்வின் கட்டளையினால் நாம் அவற்றை சாப்பிடுவதில்லை.  யாருமே பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது ஒரு கவளம் உணவாக‌ இருந்தாலும், ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்கு தெரியும்! அவன் நம்மைப் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளச்ச‌ம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலும், அல்லாஹ்தஆலா இட்ட கட்டளையை மீறினால் மறுமையில் தண்டனைக்குரியவர்களாக ஆகிவிடுவோம் என்ற இறையச்சமும் நம் உணவையே நாம் சாப்பிடுவதை விட்டும் நம்மை தடுக்கிறது.

ஆக நாம் சாப்பிடுவதை யாருமே பார்க்க முடியாத சூழலிலும் இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக நமக்குச் சொந்தமான, ஹலாலானஉணவை ரமளானின் பகல் நேரங்களில் ஒதுக்கி வைக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களில் இஸ்லாம் தடுத்துள்ள ஹராமான தீய‌ காரியங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தாலும், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சம் நமக்குள் ஏற்பட்டு அதிலிருந்து விலகி வாழ்கிறோமே, அதுதான் ரமளான் மாதத்தில் நாம் பெற்ற அந்த ஆன்மீகப் பயிற்சி! அதை நம் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கும்போது நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். (இன்ஷா அல்லாஹ்!) 

ஆனால் அநேக மக்கள், இஸ்லாம் தடுத்துள்ள‌ தீய காரியங்கள் என்று சொன்னால் இணைவைத்தல், வட்டி, விபச்சாரம்,  கொலை, கொள்ளை, மது அருந்துதல் போன்ற பெரும் பாவங்கள் மட்டும்தான் என்று சிறிய ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்திருப்பதால், மற்ற தவறுகளை தவறென்று நினைத்து அஞ்சாமல் அலட்சியப் படுத்தப்படுவதால் நோன்பு வைத்தாலும் அதன் பலனை அடைய முடியாத நஷ்டவாளிகளாக ஆகும் நிலையில் மக்கள் உள்ளனர். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) இப்படிப்பட்ட‌ நிலையை விட்டும் தவிர்ந்துக் கொண்டவர்களாக நம்முடைய ரமளான் நோன்பை நன்மை தர‌க்கூடியதாக‌ நாம் நிறைவேற்றி வருகிறோமா? அல்லது நோன்பைப் பாழாக்கும் விஷயங்கள் இன்ன இன்னவை என இஸ்லாம் பட்டியலிடுவதை சரியான முறையில் அறிந்து அவற்றைத் தவிர்ந்துக் கொள்ளாமல் வெறும் பட்டினி கிடப்பதைப்போல நன்மையற்ற நோன்பு நோற்கிறோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் இந்த ரமளானிலே சுய பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை"


அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா


மற்ற எத்தனையோ தவறுகள் தடுக்கப்பட்டதாக இருப்பினும் 'பொய் சொல்வதை'ப் பற்றி இங்கே நபிகள்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அப்படியானால் புறம் பேசுவது, கோள் சொல்வது, இல்லாததை கற்பனையாக‌ இட்டுக் கட்டுவது, வீணான பொழுது போக்குகள், அருவறுக்கத்தக்க/ஆபாசமான‌ பேச்சுகள், தீமைகளுக்கு துணை போவது, மோசடி செய்வது, வாக்குறுதி மீறுவது என அத்தனையும் செய்யலாமென்று அர்த்தமாகிவிடாது. ஒரு மனிதனால் தவறென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் சர்வ சாதாரணமாக செய்கின்ற‌, அல்லது தவறென்று தெரிந்தும் அதை அலட்சியப் படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய, அடிக்கடி நிகழும் ஒரு தவறுதான் பொய் சொல்வதாகும் என்பதால்தான், தடுக்கப்பட்ட விஷயங்களில் 'பொய்'யை முக்கியப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ள 'பொய்' என்ற இந்த ஒன்றைப் போலவே, அலட்சியமாகக் கருதப்படும் மேற்சொன்ன மற்ற அத்தனை தவறுகளும் நாம் நோற்கும் நோன்பினை நன்மை இல்லாமல் பாழாக்கிவிடும்என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு ஏன்.. நாம் நோன்பு நோற்றிருக்கும்போது நம்முடன் யாரும் வீண் வம்புக்கு வந்தால் கூட அவர்களுடன் நாமும் பதில் வம்புக்குப் போகக்கூடாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளார்கள் என்றால், எந்தளவுக்கு பேணுதலாக நம்முடைய நோன்பின் நன்மையைப் பெறவேண்டியுள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் "நான் நோன்பாளி" என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)


ஆகவே, நோன்பாளிகளே! அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!

* பொருள் விளக்கம்: (மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்காக)

ஹலாலான‌ = அனுமதிக்கப்பட்ட‌

ஹராமான‌ = தடுக்கப்பட்ட‌