Tuesday, April 26, 2011

கடவுளும்- நாமும்

1 கருத்துக்கள்
 ஓரிறையின் நற்பெயரால்
கடவுளோடு தொடர்பு பொதுவாக மக்களுக்கு இரண்டு விதத்தில் இருக்கிறது
1.நாத்திக சிந்தனை
கடவுள் Vs நாம்
2.ஆத்திக சிந்தனை
கடவுளுக்காக நாம்
   இதில் முதலாவது சிந்தனை முற்றிலும் கடவுளை மறுக்க அனைத்து வழிகளையும் ஆராய்கிறது., அது கடவுள் மறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களால் அவ்வபோது மறுக்கப்படுகிறது., எனினும் இது தர்க்க ரீதியான வெற்றியே தான் கடவுளை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்குமே தவிர நாத்திகவாதிகளின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது.,
 நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் ஆத்திக சிந்தனை முழு அளவில் வெளிபட பெற வேண்டும். ஆதாவது இறைவனை பின்பற்றுவோரது வாழ்வியல் ரீதியான வழிமுறைகள் மிக சரியாக, எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.
 எனினும் ஆத்திக சிந்தனையென வரும்போது இரண்டு விதத்தில் வித்தியாசப்படுகிறது
1.அனைத்தும் கடவுள்
2.அனைத்தும் கடவுளுடையது
 முதாலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்ற அடிப்படையில் கடவுளை ஏற்பது -இது இஸ்லாம் தவிர ஏனைய அனைத்து மதங்களும் பின்பற்றும் வழிமுறை,
இரண்டாவது, ஒரே இறைவனே இவ்வுலகம் அனைத்தையும் படைத்து அதில் உள்ள யாவற்றையும் படைத்தாக ஏற்றுக்கொள்வது இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை.
ஆக., நாத்திக சிந்தனையின் பிரதான கேள்விகளுக்கு "அனைத்தும் கடவுள்" என்ற ஆத்திக கொள்கையால் பதில் தர இயலாது.ஆக அதுவல்லாத "இஸ்லாம் கூறும் கடவுட்கோட்பாடுகளாலும் அதன் கூறும் வாழ்வியல் வழிமுறைகளாலும் மட்டுமே நாத்திக சிந்தனைக்கு போதுமான பதில் தர முடியும். எனினும் கோட்பாடுகளை முன்னிருத்தி போதுமான பதில் தரப்படினும் அடுத்து அவர்களிடம் முளைக்கும் கேள்வி அத்தகைய கோட்பாடுகளின் (அதன்)படி எத்தனை இஸ்லாமியர்கள் நடக்கிறார்கள்...? என்பதே..



இக்கேள்விக்கு பதில் தரும் முகமே இக்கட்டுரையின் நோக்கம்....
   அல்லாஹ் தன் திருமறையில் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து ஏவல்கள்- விலக்கல்களை மிக தெளிவாக இந்த மனித சமுகத்திற்கு ஏற்படுத்தி அதனை இறுதி நாள் வரை வரக்கூடிய மக்கள் யாவரும் பின்பற்ற சாத்தியமாக அச்செயல்களை எடுத்து செயல்படுத்துவதற்கு மனிதர்களுடையே ஓர் தூதரை ஏற்படுத்தி தந்தான். அந்த தூதரும் மிக சரியாக தெளிவாக அனைத்து செயல் முறைகளையும் செய்ததோடு அதனை செய்வதற்கும் ஏதுவாக ஏனைய விஷயங்களையும் இந்த மனித சமுகத்திர்கு தெளிவாக வலியுறுத்தினார்கள்.,
 ஆக இறை கட்டளைகளை (இறைவனின் நாட்டப்படி) எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் பின்பற்ற முடியும் என்பது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் வாயிலாக நாம் எளிதாக அறிந்திடலாம். அவர்கள் பிரத்தியேக பண்புகளுடன் இறைவன் பால் அனுப்பட்ட தூதராக இருந்தாலும் அவர்கள் மக்களிடையே மக்களாக வாழ்ந்ததை கண்டுதான் அச்சமுக இறை நிராகரிப்பாளர்கள்
"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.) (15:07)
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்;
"இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?" (25:07)
இதற்கு பதில் தரும் விதமாக இறைவன்
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது...(18:110)

         ஆக மனிதர்கள் யாவரும் எக்காலத்திற்கும் பின்பற்ற தகுந்த வாழ்வியல் நெறிமுறைகள் எண்ணிடங்காமல் நபிகள் நாயகம் மூலம் மிக தெளிவாக நம்மை வந்தடைகிறது எனவே தான் வல்லோன் அல்லாஹ் தன் வான்மறையில் அன்னாரைக்குறித்து
  அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)
 ஆக நம்மால் அந்த வழிமுறைகளில் எந்த ஒன்றையும் பின்பற்ற முடியாது என நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. அஃது சொன்னால் அது நமது சுய நலத்திற்காக ஏற்படுத்திய திரிபு வாதம் அல்லது அல்லாஹ் மீது பயமின்மை.
நம்முடைய வாழ்வு தற்காலத்தில் எந்த அளவிற்கு அமைந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் பாருங்கள்...
அல்லாஹ் தொழுகை குறித்து கூறும் போது
... நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்... (29:45)
ஆக தொழுகையே சரிவர பேணும்போது அது வீணான தீயச்செயல்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் நம்மை காக்கும் என்பது குர்-ஆன் அளிக்கும் வாக்குறுதி. எனினும் தொழுவோரில் பலர் வீணான காரியங்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை. எனும்போது குர்-ஆன் பொய்யுரைக்கிறதா? இல்லவே இல்லை... தொழும் அத்தொழுகை ஒரு முழுமையான தொழுகையாக அவர்களிடத்தில் இல்லை... ஏதோ கடமைக்காக தொழுகிறோம் என்பதே உண்மை. அதைப்போலவே நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற ஏனைய நல்லறங்கள் செய்து கொண்டும் புகைப்பிடித்தல், குடி, பொய், புறம் பேசுதல், அடுத்தவர்களின் உரிமையே பறிப்பது, வாக்குறுதி நிறைவேற்றாமை, அமானிதங்களை அபகரிப்பது,  வட்டி வாங்குவது போன்ற இழி செயல்கள் புரிவது.,
  இதையெல்லாம் புரிவது மார்க்கத்தை சரிவர புரிந்துகொள்ளா முஸ்லிம்கள் என்ற போதிலும் இதைப்போன்ற செயல்களை பார்ப்போருக்கு இஸ்லாம் மீதே காழ்புணர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை.ஆக வெறுமனே., பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழாமல் அஃது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக்கொளும் விதம் இவ்வுலக வாழ்வை அமைத்து கொண்டு ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரி சமுகமாக வாழ்வது நம் அனைவர் மீதும் தார்மீக கடமையாக இருக்கிறது. ஏனெனில்
அல்லாஹ் தன் வான் மறையில்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)
  என பெயர் தாங்கி முஸ்லிம்களை சாடுகிறான்.
  பொதுவாக, எதிரில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டினை நாம் சிறிதாக்க வேண்டுமெனில் நமது கோட்டை அதைக்காட்டிலும் சற்று பெரிதாக வரைந்தாலே போதும்.. அக்கோடு தானாகவே சிறிதாகி விடும். அதுப்போல நாத்திகம் என்பதை இல்லாமல் ஆக்க தூய இஸ்லாமிய சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்புவதோடு மட்டுமில்லாமல் செயல் முறை ரீதியாகவும் உணர்த்தினாலே போதும். நாத்திகம் இஸ்லாத்தின் காலடியில் நசுங்கி போகும். அல்லாஹ் அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (03:102)
                                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்