Tuesday, March 1, 2011

கடவுள் இருந்தால்...

3 கருத்துக்கள்
 ஓரிறையின் நற்பெயரால்...
      
கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு ரீதியான தவறுகளை முன்னிருத்தி தான் கடவுள் மறுப்பதற்கு ஏதோதோ காரணங்கள் என்று சொல்ல முடிகிறதே தவிர கடவுள் இல்லை என்பதற்கு எந்தவித செயல்பாட்டு காரணங்களையும் கடவுளை நிரகரிப்போர் முன்னிருத்தவில்லை.எனினும் கடவுளை நம்பாமல் இருப்பதால் -கடவுளை நம்புதால் மனித சமுதாயம் பெறும் பயன்பாடு குறித்து இந்த சிறியவனின் பார்வையில்..

எப்போதுமே., ஒன்றை ஏற்பதால் ஏற்படும் பயன் அதனை ஏற்காமல் இருக்கும்போதும் குறைவாகவோ., அல்லது முழுவதும் இல்லாமலோ இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர்களுக்கு ஏற்படும் அனேக இழப்புகள் கடவுளை நம்புவர்களுக்கும் ஏற்படுவதை காண்கிறோம்.இதை மையமாக வைத்து நாத்திக சிந்தனை கடவுள் இல்லை என நிறுவ முயல்கிறது. நாம் முன்னரே சொன்னதுப்போல் கடவுளின் பெயரால் அல்லது கடவுளுக்காக என அறிவற்ற மனிதர்கள் செய்யும் தேவையற்ற வணக்கங்களையும் போலி பூஜை புனஷ்காரங்களையும் காரணம் காட்டியே... கடவுளை மறுக்கிறார்களே., தவிர இதுவல்லாத வேறு எந்த செயல் ரீதியான காரணங்களும் இல்லை.

           முதலில் ஒன்றை விமர்சிப்பதாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை வெளிபடுத்த வேண்டும் பின்பு அதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் ஒரு மாற்று தீர்வை அல்லது மாற்று வழியை கொண்டுவர வேண்டும்... என்ற அடிப்படையில் கடவுளை ஏற்போர் அடையும் துன்பங்களுக்கு ஒரு தெளிவான மாற்று தீர்வை கடவுளை மறுப்போர் தெரிவித்தாக வேண்டும் ஆனால் மாறாக அஃது ஏற்போர் அடையும் அனேக துன்பங்கள் கடவுளை நிரகரிப்போரும் அடைகின்றனர். உதாரணமாக பசி, குடும்பத்தில் பிரச்சனை,மோசடி ,வறுமை, திருட்டு, கொள்ளை, கொலை, ஏமாற்றம், இன்னும் இதைப்போன்ற தனிமனித மற்றும் சமுக ரீதியான இழப்புகள். ஆக இதைப்போன்ற இழப்புகள் இரு சாராருக்கும் பொதுவாக ஏற்படுகிறது என்பது தெளிவு. எனவே இதற்கு "கடவுளை ஏற்பது மறுப்பது " என்ற நிலை தாண்டி ஒரு மூன்றாம் காரணம் இருக்கிறது என்பது விளங்குகிறது அதாவது சுய நலம்,விட்டுக்கொடுக்கும் மனபான்மையின்மை, போட்டியும் பொறாமையும் கொண்ட கெட்ட மனித மனங்களே இதற்கு காரணம்

         இதை கடவுளை ஏற்போர் மொழியில் சொல்வதாக இருந்தால் கடவுள் கூறும் போதனைகளை ஏற்காமல் தன் மன இச்சையின் படி செயல்படும் மனிதர்களின் செயல் பாடே இதைப்போன்ற அனேக இழப்புகளுக்கு வழி வகுக்கிறது,

        சரி., அப்படியானால் சுய நல மில்லாத மனிதர்களாக வாழ்(இரு)ந்தாலே இவ்வுலகில் நன்மையே மேற்கொள்ள போதுமானது எனும் போது "கடவுளை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழலாம்...


      தாராளமாக நல்லெண்ணமிக்க மனிதர்களால் பிறருக்கு எந்த வித கேடுகளையும் தாராமல் இருக்க முடியும். எனினும் சமுகத்தில் உலவும் கெட்ட மனிதர்களால் சமுகத்திற்கு ஆபத்து தானே.... மேலும் நல்ல மனிதர்களின் மனச்சாட்சியும் எப்போதும் நிலையாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது

   ஆனால்.,  கடவுளை ஏற்கும் போது எந்த செயலின் விளையும் நமது மனதிற்கு நன்மையோ தீமையோ ஏற்படுத்துவதாக இருந்தாலும் அஃது கடவுளுக்கு பயந்து நடு நிலையோடு செயல் பட தூண்டும் மேலும் இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுளுக்கு செய்யும் வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கு சக மனிதர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு கொடுப்பதை ஒரு கடமையாகவே பணிக்கிறது

 ..."நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)   

   தனி மனிதனின் உயிருக்கு இதை விட உயரிய வரையறையே வேறு எந்த சட்டத்தால் தரமுடியும்..?

 மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் தனி மனித வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்குகிறது அதிலும் குறிப்பாக அவர்களின் இறுதி பேருரையில்

 மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: "பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. 

"ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

  ஆக "படைப்புகள் மீது இரக்கம் காட்டாதவன் மீது படைப்பாளன் இரக்கம் காட்டுவதில்லை போன்ற பொன்மொழிகளும் தனி மனிதனுக்கு அவனது உயிர் மற்றும் உடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது

   இவ்வாறு பிறருக்கு உதவுவதை பிறர் நலன் பேணுவதை ஒரு கடமையாக இஸ்லாம் பணிக்கும் போது இதை ஒரு செயலாக மட்டுமே செய்யாமல் இதற்கும் நாளை நம் இறைவனிடம் வெகுமதி உண்டு என்ற எண்ணத்தில் இதைப்போன்ற நன்மையாக காரியங்களை அதிகமாக செய்வதற்கு "கடவுள்" என்ற சொல் நமக்கு அவசியமாகிறது. எனவே கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்ற நிலையில் நாம் பிறருக்கு அதிக நன்மை செய்வதற்கு இயல்பாக மனம் நாடுகிறது. இதே எண்ணத்தின் அடிப்படையிலும் பிறரின் நலன் கெடுப்பதற்கும் கடவுள் தண்டனை தருவார் எனும் போது அதிலிருந்து விலகவே மனம் விரும்புகிறது.

 இந்த நேரத்தில் என் நாத்திக சகோதர்களே., ஒன்றை சிந்தியுங்கள் இஸ்லாம் ஓரே கடவுளை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்வதோடு சக மனிதர்களுக்கு நன்மை செய்து வாழுங்கள் என்றே சொல்கிறது. இதில் என்ன முரண்பாடு அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வாதத்தை கண்டு விட்டீர்கள்...?
இறுதியாக., உங்கள் எண்ணத்தைப் போன்று இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லையென்றால் அஃது அது உண்மையென்றாலும் அதனால் கடவுளை நம்பியதால் அவனை வழிப்பட்டதால் எங்களை போன்றோர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... ஆனால் நாங்கள் சொல்வதுப்போல இறப்பிறகு பிறகு ஒரு வாழ்விருந்து கடவுளை வணங்காமல் காலம் முழுவதும் வாழ்வை கழித்து அவனது முன் நிற்கும் பொழுது உங்களது நிலைமை....?

           எங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கிறது இறப்பிற்கு பின் உள்ள வாழ்வில் உங்களது நம்பிக்கையே பரிசிலனை செய்ய நீங்களும் மேற்கண்ட பத்தியை மறுமுறையும் வாசியுங்கள்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (அல்குர்-ஆன் 2:21)

                                                              அல்லாஹ் மிக்க அறிந்தவன்

3 கருத்துக்கள்:

  • March 15, 2011 at 4:41 PM

    //அவனது முன் நிற்கும்பொழுது உங்களின் நிலைமை...?//

    எங்களது அய்ம்புலண்களில் நீ அகப்படவில்லை,அதனால் நாங்கள் நம்பவில்லை,தற்சமயம் நீ நேரில் காட்சியளிப்பதால் நம்புகிறோம்,அது எங்கள் குற்றமல்ல,காட்சிதராதது உன்னுடைய குற்றம் என பதில் அளிப்போம். ஆக பயமுறுத்தித் தான் கடவுளின் தத்துவம் பரவக்கிடக்கின்றது என்ற உண்மையை உணர்த்திய நண்பருக்கு நன்றி.

  • March 16, 2011 at 8:49 PM

    உங்கள் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
    தெளிவான பதில்., ஆனால் //எங்களது அய்ம்புலண்களில் நீ அகப்படவில்லை,அதனால் நாங்கள் நம்பவில்லை,// என்ற வரியை மீண்டும் படித்துப் பாருங்கள் கடவுள் ஐயம்புலன்களை மட்டும் நமக்கு ஏற்படுத்தி தந்திருந்தால்.. அப்போது உங்களது பதில் தெளிவானது... ஆனால் அதையும் தாண்டி கடவுள் சிந்திக்கும் திறன் கொடுத்திருக்கும் போது இந்த பதில் எப்படி சாத்தியமாகும். பார்த்து தான் கடவுளை நம்புவேன் என்றால் அஃது ஆறாம் அறிவு தேவையில்லை சகோதரரே... நன்றாக சிந்தித்து பாருங்கள் பரிணாமம் மூலம் உயிரின உருவாக்கம் சாத்தியமில்லை என்பதற்காகவே இங்கு ஏனைய கட்டுரைகள்...படியுங்கள் மீண்டும் கேள்விகள் இருந்தால் எழுப்புங்கள் இறை நாடினால் பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது... இல்லை.. பரிணாம் மூலம் தான் மனிதன் உட்பட உயிரின உருவாக்கம் தோன்றியதாக சொன்னால் பரிணாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரா...?

  • March 19, 2011 at 8:29 PM

    சகோதரர் குலாம்
    //கடவுள் சிந்திக்கும் திறன் கொடுத்திருக்கும் போது இந்த பதில் எப்படி சாத்தியமாகும்//
    நயமாக விளக்கம் தந்த சகோதரருக்கு முதற்கண் நன்றி.கடவுளை மறுப்பதற்கு பரிணாமம் அடிப்படையாகாது. வேத காலத்திலும் கடவுளை மறுத்தவர்கள் உண்டு. பிறவியிலேயே சிந்திக்கின்ற திறன் கடவுளால்தான் கொடுக்கப்பட்டது எனில்,ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே கடவுளைத்தான் வணங்கியிருக்க வேண்டும்.இதுவே சிந்திக்கின்ற திறன் கடவுள் கொடுக்கவில்லை என்பது தெளிவு.அய்ந்தறிவு பெற்றவைகள் ஒரே சீராக கடவுள் வணக்கத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாதது போல்,ஆறாம் அறிவு பெற்ற மனிதர்கள் மட்டும் ஒரே சீராக கடவுளை ஏற்காமல் போனது ஏனோ? எனவே பல வேறுபட்ட கடவுள்களை வணங்குவதும் மறுப்பதும்,இடைப்பட்ட நாம் இதுதான் தாய்,தந்தை,கடவுள் என உணர்த்தும் போதும்,அதையே அவர்கள் கடைபிடிக்கும்போதும் மாறுபடுத்தப்பட்டோம். அய்ம்புலன்களில் ஒன்றுதான் பார்த்தல் என்பதே தவிர பார்த்தல் மட்டுமே அய்ம்புலன்கள் ஆகாது சகோதரரே.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!