Sunday, December 5, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

3 கருத்துக்கள்
   ஓரிறையின் நற்பெயரால்
           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை  கடவுள் நமக்கு வழங்க வேண்டும் .. நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"
  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.

                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29

     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?
   அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?
   இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான். அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?
ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115

    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்., ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கமுமே எல்லாம் இறை நாட்டமே எனும் விதி அங்கு அவசியமாகிறது.,
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23
    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை
    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

3 கருத்துக்கள்:

  • December 7, 2010 at 11:27 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மிக ஆழமான விஷயத்தில் கை வைத்து உள்ளீர்கள் சகோதரர் குலாம். சிறப்பான முயற்சி. அதேநேரம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    ஆனால், அதே நேரம், இஸ்லாத்திலே இறைவன் மட்டுமே அறிந்த புரிந்த விஷயங்களில் விதியும் ஒன்று. குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் கடைசியில் நாம் வந்து சேரும் விஷயம் சாராம்சம் இதுதான்...

    நடந்தவை அனைத்தும் இறைவனின் விதிப்படி நடந்தது. இனி நடப்பவையும் இறைவனின் விதிப்படிதான் நடக்கும். ஆனாலும், அப்படி ஒன்று இல்லாதது போல நாம் நம் முயற்சியை அமைத்துக்கொள்ளல் வேண்டும். ஏனென்றால், நம் முயற்சிக்கு இறைவனிடத்தில் நன்மைகள் உள்ளன. முயற்சியின்மைக்கு இறைவனிடம் தண்டனைகளும் உள்ளன. ஆதலால் முயல்வோம். முயற்சியுடையார்க்கு அவரின் பாதை மென்மேலும் இறைவனால் இலகுவாக்கப்படுகிறது.

    //////////////
    பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6605

    அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் ‘சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்றார்கள்.

    அப்போது மக்களில் ஒருவர் ‘அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு பிறகு ‘(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
    /////////////

    அப்படியே சூரத்துல் லைலை முழுதும் வாசித்து விடுங்கள்.

    ஆக ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஒரு வேலை உண்டு. அதை எப்படி செய்கிறார் என்பதே மேட்டர். அல்லாஹ்வுக்குத்தெரியும் இன்னின்னார்தான் நம்பிக்கை கொள்வர் என்று. ஆனாலும், தன் இறைத்தூதர்களுக்கு அனைவருக்கும் சொல்ல-பிரச்சாரம் செய்ய கட்டளை. அவன் நாடினாலன்றி எவரும் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று நன்கு தெரிந்தும் அவர்கள் தமக்கிட்ட பணியை செவ்வனே செய்து முடித்தனர். அதற்குத்தான் அவர்களுக்கு மகத்தான கூலி.

    அதேபோல நமக்கு....
    ஊரெல்லாம் தெருவெல்லாம் டாஸ்மாக்கும், விபச்சாரமும், சூதாட்டமும், வட்டியும், இணைவைப்பும், கேளிக்கைகளும், லஞ்சமும், ஊழலும் என்று எவ்வளவோ கெட்ட விஷயங்கள் நீக்கமற நிறைத்து வைத்து, நாம் எப்படி அவற்றை எல்லாம் விலக்கி விட்டு இறைக்கட்டளையை பேணுகிறோம் என்பதே நமக்கு இடப்பட்ட சோதனை...

    இஸ்லாத்தை பேணி நடந்தால் மறுமையில் நிச்சயம் ஜெயம்.

  • December 8, 2010 at 5:09 PM

    வ அலைக்கும் சலாம் வரஹ்
    சகோதரர் சிறப்பான மேலதிக விளக்கத்துடன் நல்லப்பதிவு! ஏனென்றால் இதை பின்னூட்டம் என்று சொல்லமுடியாது., ஜஸாகல்லாஹ் கைரன்

  • December 8, 2010 at 6:39 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதரர் குலாம்,

    விதி என்ற ஒன்றை பற்றி அதிகம் கவலைக்கொள்ளாமல் நல்ல அமல்களை செய்து இறைவனின் அருளை பெற வேண்டுமென்பதே என்னுடைய கருத்தும்.

    நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் சகோதரே..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!