Showing posts with label நபிமொழி. Show all posts
Showing posts with label நபிமொழி. Show all posts

Monday, July 18, 2011

விமானப் பயணத்தின் சில நினைவுகள்!

0 கருத்துக்கள்


விமானப் பயணத்தின் சில நினைவுகள்!

பயணங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணம் விமானப் பயணமே! அதை விடக் காஸ்ட்லியாக சந்திர மண்டலத்துக்கு செல்ல இப்பொழுதே புக்கிங் நடந்து வருவதாகக் கேள்விப் பட்டேன். நான் பயணித்ததில் அதிகம் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில்தான். டிக்கெட் புல்லாகி விட்டால் அவ்வப்போது ஏர் இந்தியா, ஏர் லங்கா பிளைட்களை நோக்கி ஓடுவதும் உண்டு.

இதில் சவுதியாவில் பயணிக்கும் போது ஒரு நிம்மதி ஏற்படும். விமானம் கிளம்பும் போதே பயண பிரார்த்தனை ஒன்றை ஒவ்வொரு முறையும் ஓதச் செய்வார்கள். விமானப் பயணத்திலும் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் சவுதியா நிர்வாகத்தினருக்கு ஒரு சல்யூட்.

நபிகள் நாயகம் அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை “அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர்” எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.

இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் - 2392

சவுதியாவில் பிரயாணம் செய்யவே அதிகமான பயணிகள் விரும்புகின்றனர். நேரம் தவறாமை. வேலை நிறுத்த போராட்டம் இல்லாத ஒரு ஒழுங்கு. சிறந்த பணிவிடை. தூய்மை என்று பல காரணங்களால் சவுதியாவுக்கு என்றுமே கிராக்கிதான். 2009 வருடத்தை காட்டிலும் போன வருடம் பயணிகள் அதிகம் சவுதியாவை பயன்படுத்தியிருக்கிறார்கள். 14 சதவீதம் போன வருடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

8712668 பயணிகளை 68753 விமானங்களில் முந்திய வருடம் பயணிக்க வைத்தது சவுதியா. அதே போன வருடம் 9915578 பயணிகளை 73544 விமானங்களில் பயணிக்க வைத்து சாதனை புரிந்துள்ளது சவுதியா. பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்க விமானங்களின் எண்ணிக்கையோ 7 சதம்தான் அதிகரித்துள்ளது. லாபத்தில் கொழிக்கிறது சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்.

இது இவ்வாறு இருக்க நமது நாட்டு ஏர்இந்தியாவின் நிலையையும் சற்று பார்ப்போம். அளவுக்கதிகமான சம்பளம், தேவையற்ற வேலை நிறுத்தம், வேலை செய்பவர்களிடம் அர்ப்பணிப்புத் தன்மை இல்லாதது என்று பல காரணங்களால் இன்று ஏர்இந்தியா மிகவும் அபாயகரமான சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறது. 'எனது தாய் நாட்டு விமானம்' என்று பெருமையோடு பயணம் செய்ய மனம் விரும்புகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் சேவைகளில் உள்ள குளறுபடிகளால் பலரும் சவுதியாவையும், ஏர்லங்காவையும்தான் நாடுகிறார்கள். தற்போதய ஏர் இந்தியாவின் நிலையை நேற்றய தினமலரின் செய்தியை பார்ப்போம்.
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் கடன் சுமையால் தத்தளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, 2007ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில், 20 ஆயிரத்து 320 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதியிழப்பு மற்றும் கடன் சுமையால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்குள் இந்நிறுவனம், 20 ஆயிரத்து 415 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை இந்நிறுவனம் சந்திக்க நேரிடும் என, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க, பங்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உதவ, மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக்குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
-தின மலர் 16-07-2011

அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நமது நாட்டு மக்களே அதிகம் பணியில் உள்ளனர். தாய் நாட்டுக்கு வருடம் ஒரு முறையும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் போய் வரும் நம் நாட்டவர் அதிகம். நம் நாட்டவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்நிறுவனத்தை லாப நோக்கில் செயல்பட வைத்து விடலாம். அல்லது நஷ்டத்தில் இயங்கும் இந்நிறுவனத்தை தனியாருக்கு கொடுத்து விடலாம். ஆறே மாதத்தில் தனியாரிடம் கொடுத்தால் லாபமுள்ள தொழிலாக இதனை மாற்றிக் காட்டுவர்.

ஏர்லைன்ஸில் பணிபுரியும் எனது நண்பர் பிரான்ஸிஸிடம் இது பற்றி பேசினேன். 'தேவையற்ற ஆட்கள். அளவுக்கதிமான சம்பளம், நிர்வாகக் குறைபாடு இவைகளே ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்க காரணம்' என்கிறார். அரசு பேசாமல் தனியாரிடம் ஏர் இந்தியாவை விற்று விடுவதே நலம் என்கிறார்.

சவுதியா அதிகம் லாபம் சம்பாதிக்கும் வழித்தடங்களில் ஒன்று ரியாத்-தம்மாம்-சென்னை. எந்த நேரமும் இந்த வழித்தடத்தில் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே இருக்கும். எல்லாமே அட்வான்ஸ் புக்கிங். கர்நாடக, கேரள மாநிலத்தவர் அதிகம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நமது ஏர் இந்தியா ஏன் இந்த வழித் தடங்களில் விமான சேவைகளை நடத்துவதில்லை? சவுதியாவை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா?

மன்மோகன் சிங்குக்கு சோனியாவை தாஜா பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுத்து ஒரு கலவரத்தை உண்டு பண்ணி இந்து ஓட்டுக்களை தக்க வைப்பது என்ற குறி. ராமருக்கு கோவில் அதுவும் ஒரு பள்ளி இருந்த இடத்தை அபகரித்து கட்டிவிட்டால் இந்தியா முன்னேறி விடும் என்பது அத்வானியின் எண்ணவோட்டம். நிலைமை இப்படி இருக்க... இந்த அரசியல் வாதிகளுக்கு நாட்டைப் பற்றிய கவலை வருமா என்ன?

Tuesday, October 19, 2010

நபிமொழி

0 கருத்துக்கள்
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71